Skip to main content

வெரோணிக்காள் ஒரு நாவல் எழுத ஆசைப்பட்டாள்!

1
நாவலில் தான் நீளக் கதைகளை எழுத முடிகிறது. நீளம் அவளுக்குப் பிடித்த நிறம்.
கன்னியாகுமரி போய் முதன் முதலாய் கடலைப் பார்த்த பொழுது அவளுக்கு வயது பனிரெண்டு. கடல் பார்த்த மறுகணமே எப்படியாவது ஒரு நாவலை எழுதிவிடுவது என்ற முடிவிற்கு வந்திருந்தாள். கடல் அன்றைக்கு அத்தனை நீளமாக இருந்தது. 

அத்தனை அகலமான நீலத்தை அவள் கடலில் தான் பார்த்தாள். கடல் பார்த்து வந்த மறு தினமே கோணங்கியின் கோவில்பட்டி முகவரிக்கு, 'உப்பு நீலமாக இருக்கிறது!' என்று ஒருவரிக்கடிதம் எழுதியிருந்தாள். அவள் எழுதாமல் மறைத்த அடுத்த வரி, ' நீள நாவலொன்று எழுதப்போகிறேன்'. 
வெரோணிக்காவிற்கு சின்ன கண்கள். பார்த்தால் தெரியாது. அவள் முகத்தைப் பார்க்கிறவர்கள் அவள் எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பதாகவே நினைத்துக் கொள்வார்கள். உண்மையில், அவள் அப்படியெல்லாம் சிந்திக்கிற ஆளே இல்லை. சின்ன கண்களைக் கொண்ட பெரிய பெண் அவ்வளவு தான்.
நாவல் தான் எழுத வேண்டும் என்று முடிவு செய்த பின்பு தான், நாவலுக்கும் நீளத்திற்குமான பந்தங்கள் ஒவ்வொன்றாக அவளுக்குப் புலப்படத் தொடங்கின. 
ஒரு நாவல் முதலில் வாசகர்களின் கண்களை நீலமாக்குகிறது. அதன் பின் நாக்கில் ருசியாக படிந்து விடுகிறது. நாவல் பிரியர்களை ரொம்பவும் எளிதாய் அடையாளம் கண்டு கொள்ள முடியும். அவர்களுடைய நாக்கு, இத்தாலிய பெனடிக்ட் குருமடத்து ரோஜா மலர்களில தடவப்பட்ட சயனைடு போல, நீலம் பாரித்திருக்கும்.
பாளையங்கோட்டையில் கோடை தொடங்கியது என்றால் நாவல் வதைபடும். மேட்டுத்திடல் சாலையிலுள்ள மாவட்ட மைய நூலக வாசலில், திருச்செந்தூரிலிருந்து வரும் ஒரு பாட்டி, கூடை நிறைய நாவலோடு உட்கார்ந்திருக்கும். எல்லாமே சுட்ட நாவல்கள். காற்படி, அரைப்படி என்று அளந்து வாங்கிக் கொள்ளலாம். நாவல்களை அளந்து, தடித் தடிப் புத்த்தகங்களின் பக்கங்களைக் கிழித்து அதில் பொதிந்து தரும். 
அந்தப் பாட்டியிடம் தான் வெரோணிக்காள் எப்பொழுதும் நாவல் வாங்குவாள். நாவலை விடவும், அந்தப் பாட்டி பொதிந்து தருகிற பக்கங்களில் தான் அவளுக்கு ஆர்வம். பாட்டிக்கு நூலக ஊழியர்களோடு ரகசியத் தொடர்பு இருந்தது. பாட்டி கிழிக்கிற புத்தகங்கள் பெரும்பாலும் சாண்டில்யனும், நா. பார்த்தசாரதியும் எழுதியவை. ’கிழிக்க ஏதுவாய் புத்தகம் எழுதுறது ஒரு கலை, பாப்பா!' 
அத்தி பூத்தாற் போல, ஜெயகாந்தனும் அகிலனும் கூட கிடைப்பார்கள். வெரோணிக்காள் நாவலை வாங்கிய கையோடே அந்தப் பக்கங்களையும் வாசிக்க ஆரம்பித்து விடுவாள். நாவலின் நீலச்சாயம் பட்டு பாதி வரிகள் அழிந்து போயிருக்கும். ஆனாலும், அது எந்த நாவலின் கிழிக்கப்பட்ட பக்கம் என்று கண்டுபிடிப்பது அவளுக்குப் பிடித்த புதிர் விளையாட்டு. 
இப்படித்தான் ஒரு முறை, கிழிந்த ஒற்றைத் தாளில் ஜே. ஜே. என்ற ஆள், 'சிவகாமி அம்மாள் அவளுடைய சபதத்தை நிறைவேற்றி விட்டாளா?' என்று கேட்டதை வாசித்தாள். அதற்கப்புறமாகத்தான் அவள் நாகர்கோவில் மணிக்கூண்டு ஜங்சனில் நின்ற புளியமரத்தையும் ஒரு எட்டு போய்ப் பார்த்து வந்தாள். அந்த மரத்தடியில் தான் ஜே. ஜே. ஜவுளி வியாபாரம் செய்ததாக அவளுக்குச் சொல்லியிருந்தார்கள்.
புளியமரம் தான் அவளுக்குப் பிடித்திருந்தது. நல்ல நாவல் முதலில் பிடிக்க வேண்டும் என்பது அவளது அசைக்க முடியாத நம்பிக்கை. ஒரு நாவல், நல்ல நாவலா இல்லையா என்பதை அவளால் தொட்டுப் பார்த்தே சொல்ல முடியும். தொட்டதும், விரல்களில் படிய வேண்டும். படிந்தால் நல்ல நாவல், இல்லையென்றால் குப்பை.


2

வெரோணிக்காள் கண்ணாடி முன் நின்று தான் ஆடை மாற்றுவாள். ஆளுயுரக் கண்ணாடி. 
அன்றைக்கும் அப்படித்தான். என்ன கிழமை, தேதி என்றெல்லாம் ஞாபகம் இல்லை. ஏதோவொரு வழக்கமான நாள்.
எப்பொழுதும், ஆடை மாற்றுவதற்கு முன் கொஞ்ச நேரம் கண்ணாடி முன் நின்று அழகு பார்த்துக் கொள்வாள். கொஞ்ச நேரம் தான். 
அவளுக்கு என்றைக்குமே தன்னை நல்லா இருக்காது. ஏதாவது ஒரு குறை இருக்கும். சில நேரம் நிறைய கூட.
இடுப்பு இன்னமும் சின்னதாக வேண்டும்; பக்கவாட்டில் பார்த்தால் தெரியவில்லை, ஆனால், நேர்ப் பார்வைக்கு அகலமாக இருக்கிறது. 
தாடையும் அகலம். வாயைக் குவித்து வைத்தால் தான் முகம் வாட்டத்திற்கு வருகிறது. 
நேராய் நிற்கும் போதும், வலது தோள்பட்டை இறங்கியே இருக்கிறது. ஒரு வேளை, வலது பக்கம் குழைந்து தான் நேராய் நிற்கிறோமோ? காலை உதறிக் கொண்டு லேசாய் இடது பக்கம் சரிந்து நின்று பார்ப்பாள். சரியானது போலத் தோன்றும். 
கைகள் குட்டையானவை தான். வித்தியாசமாகத் தெரியாது. ஆனால், நீளமில்லை. விரல்களும் குள்ளம். 
இடுப்பில் கை வைத்து நிமிர்ந்து பார்த்தால், அவள் அழகு போலத் தோன்றும். ஆனால், எல்லார் முன்பும் அப்படியே நிற்க முடியுமா என்ன? 
இதெல்லாம் இப்படி கண்ணாடி முன் நின்று யோசிப்பதோடு சரி. நாள் முழுதும் அவள் எப்படி நடக்கிறாள், நிற்கிறாள் என்று அவள் நினைப்பதே இல்லை. சுபாவம் எதுவோ அது போலவே பகலெல்லாம் நடக்கிறது.
அன்றைக்கும் இப்படித்தான். ஆடை உடுத்துவதற்கு முன் அப்படியும் இப்படியுமாய் அழகு பார்த்துக் கொண்டிருந்தாள்.
தளர்ந்தவொரு தருணத்தில் மார்பு வரை கட்டியிருந்த துண்டு நழுவியது. மறுகணம், அனிச்சையாய் கண்ணாடியிலிருந்து விலகி ஓடினாள். நல்ல வேளை, துண்டு முழுதாய் கழறவில்லை.
கண்ணாடிக்கு முதுகைக் காட்டி, துண்டை இறுக்கக் கட்டிக் கொண்டு, திரும்பிய போது தான் அந்த விபரீதம் உறைத்தது. 
கண்ணாடியில் தெரியும் தனக்கு மறைக்கத் தான் அப்படி விலகி ஓடினேனா?
அன்றைக்கு, வெரோணிக்காள் ஒரு நாவல் எழுத ஆசைப்பட்டாள்!

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக