Skip to main content

இன்னொரு வாசகப் பதிவு - நான் ஏன் தலித்தும் அல்ல? - சீமா செந்தில்


எல்லாவற்றின் போதாமைகளையும் ஆய்ந்து தெளிவது தான் பூரணத்தின் பாதைக்கான திறவுகோல் . பாதைக்கான திறவுகோல் தான் ...பயணம் நெடிது ......கண்ணுக்கெட்டா...தூரத்தில் அல்லவா அது காத்துக் கொண்டிருக்கிறது ? 
" தலித் என்பதை அரசியல் பிரக்ஞையாக விளங்கிக்கொண்ட அடுத்த நிமிடமே இந்தக் கேள்வியும் அவர்களுக்குள் வந்து விடுகிறது .
ஏன் நான் தலித்தும் அல்ல ?
தலித் சொல்லாடல் , எவ்வளவுக்கு அன்னியோன்யமானதோஅவ்வளவுக்கு வெறுக்கக் கூடியதும் .அந்த வகையில் தலித் அரசியலுக்கும் உடலுறவிற்கும்பெரிய வித்தியாசமில்லை ;இரண்டிலும் ஞாபகங்கள் தான் கிளர்ச்சியைத் தருகின்றன ;அதே போல "போராட்டம் "முடிந்ததும் தனித்தனியே அவரவர் அவரவர் 'உள்ளே 'சுருங்கிக்கொள்ள வேண்டியது தான் .இரண்டுமே தனிமையையும் வெறுமையையும் தான் பெருக்குகின்றன"
என்று முன்னுரையிலேயே முகத்தில் அறைந்து விட்டு தன் வேகத்தை நிறுத்திக் கொள்ளாமல் கிட்டத்தட்ட முன்னூறு பக்கங்கள் பயணிக்கிறது இந்நூல் . 
இதன் பேசுபொருள் கால காலமாக நம்மை கணந்தோறும் அழுத்திக் கொண்டிருக்கும் ஒரு அரூபமான அபாயம் .கணந்தோறும் வாசனைப் பூச்சுக்களோடு வளைய வரும் ஒரு அருவத்தின் அழுகிய உடல். எத்தனை அளவு மூளைக்குள் அந்த அருவத்தின் அழுகல் அதிகப் படுகிறதோ அத்தனை அளவு தன்னை சமூகத்தில் மேன்மை கொண்டது என்று உரிமை கொள்கிறது . 
உடுமலை சங்கரின் படுகொலைக் காட்சியின் பதட்டத்தோடு தொடங்கும் இந்த ஆய்வுவெளி .....["இது அவநம்பிக்கைக் கடல் ...என்று எனக்குச் சொல்வார் யாரும் இல்லை . சொல்லியிருந்தால் படகை எடுத்திருக்கவே மாட்டேன் .அது இரத்தம் போல் பிசுபிசுப்பானது என்று கதையாகக் கூட யாரும் எழுதியிருக்கவில்லை' ] இனி திரும்பவே கூடாது என்ற தப்பித்தல் மனோபாவத்தில் கிராமத்தில் இருந்து வெளியேறும் சாதி மறுக்கப்பட்ட இளைஞனையும் .......அதே தப்பித்தல் மனோபாவத்தில் உடன் இணைந்து வெளியேறும் துணையாய் அவனைக் கருதும் சாதி வீட்டுப் பெண்களின் மன நிலையையும் .....
தலித் என்ற சொல்லின் வேர் ...அது பொதுவெளியில் புரிந்து கொள்ளப்பட்டதும் ...நிறுவப்பட்டதுமான நிலையின் பிறழ்வு .......[அது தனது கட்டமைப்பில் இருந்து தளர்ந்து அல்லது நீர்த்துவிட்டதா ?]
சாதி ஆட்கள் சாதியல்லாத தலித்தாக முனையும் போது அதன் அங்கீகாரம் குறித்த சந்தேகமும் போதாமையும் .......
தலித் இலக்கியம் யாரால் எழுதப் படலாம் .....அல்லது யார் எழுதுவது ?
அவ்வெளியில் இருந்து விலக்கப்பட்ட அல்லது கட்டாயமாக மறுக்கப்பட்ட இலக்கிய வகைமை எழுத்தாளர்கள் அல்லது நவீனர்கள்
"தங்களின் மற்றவர்களை "[இந்த தங்களின் மற்றவர்கள் என்ற பதம் முக்கியத்துவம் வாய்ந்தது ] எப்படிக் கைக்கொள்கிறார்கள் ? ...அதன் விளைவு என்ன ? 
தலித் என்பவர் விடுதலைக்கான போராட்டத்தில் .....இதில் இருந்து விடுபட வேண்டும் என்ற அடையாளத்தையும் ...விடுதலையின் இலக்கு எது என்ற இன்னொரு அடையாளத்தையும் நோக்கி ......இரு வேறு அடையாளங்களுக்குள் இயங்கும் சிக்கலையும் என இதுவரை நிலவி வரும் பொதுக் கருத்தோட்டத்தின் போதாமைகளை ...தரவுகள் ..ஒப்பீடுகள் ...வகைமைப் படுத்தல் .....இறுதியில் தன் தனித்ததான தீர்மானம் மொழிதல் என்று முற்றிலும் வேறு தளத்தில் இயங்குகிறது இந்நூல் .
பூர்வ பௌத்தர்களின்மீதான அழித்தொழிப்பில் ....கிளைத்தெழுந்த நொறுக்கப்பட்டவர்கள் என்ற பதம் கொண்ட தலித் என்னும் சொல்லாடல் ....அதன் "மூலம்" மறுக்கப்பட்டு எப்படி சாதி மறுக்கப்பட்டவர்களின் ஒற்றை அடையாளம் ஆகிறது என்பது தான்தவிர்க்க முடியாத வேதனை நிகழ்வாகிறது . 
போலவே .....ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து வெளியேறும் நிகழ்ச்சி ...யாரிடம் இருந்து என்ற கேள்வியை தன்னகத்தே இயல்பிலேயே கொண்டிருக்கிறது .ஆதிக்க சாதிகளிடம் இருந்து என்றால் யார் ஆதிக்க சாதி ? ஒடுக்கப்பட்டவர்கள் என்றால் யார் ஒடுக்கப்பட்டவர்கள் ? உண்மையில் அறுதியான ஒரு பட்டியல் அப்படி நிலவுகிறதா ? ஒடுக்கப்பட்டவனிலும் ஒரு ஒடுக்கப்பட்டவன் என்ற பட்டியலின் இறுதி புள்ளி எது ?
முற்றிலும் தன் விலக்கம் செய்து கொள்ளும் ஒரு சாதியும் ....முற்றிலும் சாதி மறுக்கப்பட்ட இன்னொரு பிரிவும் எவ்வாறு சாதியமைப்பின் புறத்தே இருந்து கொண்டு ஆளுமை செய்வதும் ...அடக்கப்படுவதும் ? 
போலச் செய்தல்...திரும்பச் செய்தல் என்ற வடிவம் பெறுகையில் எவ்வாறு அது கலக உணர்ச்சி ஆகிறது ? 
தொன்மங்கள் ....நாட்டார் வழக்குகள் எவ்வாறு தெய்வமாக்கல் எனும் நிகழ்வு மூலம் ......தலித்துகளின் அடையாளத் துடைப்பு செய்கின்றன ?சாதிய படுகொலைகள் நீடிக்கும் போது தெய்வமாக்கல் இப்போது நிகழாமல் போனதின் ....அல்லது தெய்வமாக்கலின் மறதிக்கு பின்புலம் என்ன ?
இந்தக் கேள்விகள் மிக்க காத்திரமானவை . அதை இந்த நூல் அலசும் விதம் அலாதியானது மட்டுமல்ல .....ஆய்வுப் பூர்வமானது . 
கலகக்காரர்களின் கால்வழி மரபு எனும் கட்டுரையில் எம் எஸ் எஸ் பாண்டியன் அவர்களுக்கு அளித்திருக்கும் எதிர்வினை .... அயோத்திதாசரை அணுகவேண்டிய முறை குறித்தும் ....பெரியாரால் பேச முடிந்ததை ஏன் அவரது வழித்தோன்றல்கள் பேச முடிவதில்லை என்பதையும் அலசும் முறை நூலின் பின்னட்டையில் குறிப்பிட்டதை போல புதிய கண்களை திறந்து வைக்கக் கூடியவை .
எவ்வகையிலும் தன்னை தலித் என்று சொல்லிக்கொள்ள விரும்பாதவன் .......முகம் கொடுக்கவொண்ணா கொடூரங்கள் அரங்கேறும்போது ...எது தன்னை மறுக்கிறதோ ...எது தன்தனித்த அடையாளத்தை மறுக்கிறதோ ......அதையே வலிந்து பூண்டு கொண்டு
அதையே தன் அடையாளமாய் சொல்ல நேர்கிற அவலம் எதனால் என்று அறிய விரும்புகிறவர்கள் அவசியம் வாசிக்கவும் ....நெஞ்சில் இருத்திக் கொள்ளவும் வேண்டியதாக ........தன் உட்செறிவில் நிலை கொள்கிறது இந்நூல் .
இந்நூலில் இருந்து மேற்கோள்களை சொல்லி எழுதவேண்டுமென்றால் அதுவே ஒரு சிறுநூலாகி விடும் ஆபத்து இருப்பதால் ஒற்றை மேற்கோளை சொல்லி இந்த மட்டிலும் விலகிக் கொள்கிறேன் .
"தலித்தாக மாறுவதை காதலாக மட்டுமல்லாமல் அரசியலாகவும் செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன் .
இந்த யோசனையைக் கேட்ட மாத்திரத்தில் இதற்கு வரக்கூடிய முதல் எதிர்வினை என்னவாக இருக்குமென்று நினைத்துப் பார்க்கிறேன் .'வக்கிரம் '!
'தனக்கு ஒரு கண் இல்லை என்பதற்காக அடுத்தவரையும் ஒரு கண்ணை தோண்டிக்கொள்ளச் சொல்வது என்னவொரு மனநிலை? வக்கிரம்!' இவ்வாறு சொல்லல விரும்புகிறவர்களிடம் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்று தான் .தயவு செய்து இந்த ஒற்றைக் கண் உவமையை மாற்றி விடுங்கள் .ரொம்பப் பழசாயிருச்சு .
உண்மையில் தங்களுக்கு நெற்றியில் ஒரு விசேஷக் கண் இருப்பதாய் நம்பிக்கொண்டு அதற்கொரு கூலர்ஸும் அணிந்துகொண்டு திரிகிற , இந்த தேசத்து சாதி ஆட்களிடம் ,'கூலர்ஸை கழற்றிவிட்டு வாருங்கள்' என்று மட்டும் சொல்கிறேன் "
நன்றி . பேராசிரியர் தருமராஜ் அவர்களுக்கு .

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக