ஜெயமோகனுக்கு பத்மஶ்ரீ விருது கிடைத்தி…. வழங்கப்பட்டிருக்கிறது.
வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெகு சில சமயங்களில் மட்டுமே சரியான நபர்களுக்கு சரியான விருதுகள் வழங்கப்படுகின்றன. இது இந்திய விருதுகளுக்கு மட்டுமல்ல, உலக விருதுகள் பலவற்றிற்கும் பொருந்தும்.
எனது கணிப்பின் படி, ஜெயமோகன், இலக்கியத்திற்காக இந்தியாவில் வழங்கப்படும் எந்தவொரு விருதையும் பெற்றுக் கொள்ளும் தகுதி வாய்ந்தவர். மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளர். நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான அத்தியாயத்தை அடையாளப்படுத்துகிறவர். அவருடைய எழுத்து முறையும், உழைப்பும் ஏராளமான இளைய எழுத்தாளர்களுக்கு முன் மாதிரியாய் திகழ்கின்றன என்பதை நான் பார்க்கிறேன். சாகித்ய அகாடமி விருது அவருக்கு ஏன் இது வரையில் அறிவிக்கப்படவில்லை என்பது கூட எனது கேள்விகளில் ஒன்று. எனவே பத்மஶ்ரீ வழங்கப்படுவது ஒன்றும் ஆச்சரியமான விஷயமில்லை.
ஆனாலும்…
இந்த விருதை தன் மேலே போர்த்திக் கொள்வதில் ஜெயமோகனுக்கு ஒரு சங்கடம் இருப்பதாக அவர் கற்பனை செய்கிறார். இந்தக் கற்பனை அதீதமானது என்பது அவருக்கே கூட ஒரு ஓரத்தில் விளங்கும். விருதுகள் கருத்தியல் நிலைப்பாட்டிற்காக வழங்கப்படுவதில்லை என்பதை அவர் அறிய மாட்டாரா என்ன? இந்தியா மாதிரியான, அங்கீகரிக்கப்பட்ட கலைக் கோட்பாடுகளோ, கொள்கைகளோ இல்லாத தேசங்களில் விருது வழங்குவதென்பது ஒரு அங்கீகாரம், சில சலுகைகள், பல்வேறு அனுகூலங்கள்… அவ்வளவு தான். இதை ஏற்றுக் கொள்வதில் அவருக்கு அப்படியென்னவொரு கற்பனையான அசூயை என்று எனக்கு விளங்கவில்லை.
யோசித்துப் பார்த்தால், விருதுகளின் மீதான ‘சீச்சீய் இந்தப் பழம் புளிக்கும்..’ என்ற சுந்தரராமசாமி சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருக்கிறாரோ என்றே எனக்குத் தோன்றுகிறது. என்னைக் கேட்டால் அது ஒரு பொருட்படுத்தத்தக்க கூச்சமே இல்லை என்று தான் சொல்வேன். இது ‘அரசாங்க விருதுகளின் மீதான ஒவ்வாமை’ அவ்வளவு மட்டுமே.
தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் கலைஞனுக்கு இது போன்ற விருதுகள் கிடைப்பது அபூர்வம். அந்த வகையில் ஜெயமோகன் இவ்விருதை பெற்றிருப்பதில் எனக்கெல்லாம் மகிழ்ச்சி தான்.
வாழ்த்துகள் ‘பத்மஶ்ரீ ஜெயமோகன்’!
Comments
- செல்வா ஜாண்