கேள்வி 1: ஒடுக்கப்பட்டோர்
பெருஞ்சமூகத்துடன் உரையாடலை வைத்துக் கொள்வது ஏன் அவசியம்? அப்படியொரு உரையாடல் நடைபெறுவதால் என்ன நடந்து
விடும்? காலம் காலமாய் என்னை மிதித்துக்
கொண்டிருப்பவனுடன் நான் எப்படி உரையாடலுக்குச் செல்வது? அவன் காலை வெட்டுவது சரியா அல்லது அவனோடு
உரையாடுவது சரியா?
கேள்வி 2: உரையாடல்
அல்லது பேச்சுவார்த்தைக்கு முன்வருவது என்பது தோல்வியின் பயத்தில் நடப்பது
தானே! ஒடுக்கப்பட்டவர்கள்
பெருஞ்சமூகத்துடன் தோற்றுப் போனார்கள் என்று சொல்வதா? அதனால் தான் உரையாடலை
பரிந்துரைக்கிறீர்களா?
கேள்வி 3: இந்த
உரையாடலை வெற்றிகரமாக செய்து முடித்ததைப் பார்த்தால் இயக்குனர் இரஞ்சித்தை
இப்பெருஞ்சமூகம் தனக்குத் தோதாக தகவமைத்துக் கொண்டது என்று தானே அர்த்தம்? இரஞ்சித் விலை போனார் என்று தானே சொல்ல
வேண்டும்?
கேள்வி 4: பெருஞ்சமூகத்தைச்
சார்ந்த நான், அதாவது ஒடுக்குதலை அனுபவித்தறியாத நான், இந்த உரையாடலை எவ்வாறு
முன்னெடுத்துச் செல்ல வேண்டும்? நீங்கள் சொல்வது போல் மெட்ராஸ் போன்ற முயற்சிகள்
ஒரு உரையாடலின் நம்பிக்கையளிக்கும் பகுதிகள் என்றால், இதைக் கேட்ட பெருஞ்சமூகம்
பதிலுக்கு என்ன மாதிரியான பேச்சை உருவாக்க வேண்டும்?
கேள்வி 5: அது என்ன
'பெருஞ்சமூகம்', அவர்கள் என்ன 'பெரிய' இவர்களா...?
கேள்வி 6: என்ன
நடந்து விடும்? சினிமா என்ற
பெருங்கதையாடல் இரஞ்சித் போன்ற கலைஞர்களை தனக்குள் இழுத்துக் கொண்டு தனக்கு
சார்பானவராக மாற்றி விடும்! அது தரக்கூடிய
நெருக்கடி தாங்காமல் இப்படியான கலைஞர்களும் தங்களை சமரசம் செய்து
கொள்வார்கள். ஒடுக்கப்பட்ட சமூகங்கள்
தங்களது ஒவ்வொரு பிரதி நிதிகளையும் இப்படியே தான் இழந்து நிற்கிறது. உரையாடல் என்று சொல்வதே ஏமாற்று வேலை தானா?
கேள்வி 7: அது
அவ்வளவு எளிதாகவும் நடந்து விட முடியாது!
இந்தப் படத்தின் காரணமாக அதன் குழுவினருக்கு ஒடுக்கப்பட்ட சமூகங்களில்
கிடைத்த வரவேற்பு 'மகிழ்ச்சி' யானது மட்டுமல்ல; 'நெருக்கடி'யானதும் கூட! அடுத்த படத்தை யோசிக்கும் போது அக்குழுவினர்
அந்த நெருக்கடியை நிச்சயம் உணர்வார்கள் என்றார்கள், இப்படத்திற்கான வாழ்த்துகளைப்
பெற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் தங்களையறியாமல் ஒடுக்கப்பட்ட சமூகங்களிடம் பிரமாண
வாக்குமூலம் தந்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்வதா?
கேள்வி 8: வழக்கத்திலிருந்து
மாறாக மெட்ராஸ் திரைப்படத்தின் கொண்டாட்டத்தில் நடிகர்கள் பின்புறம் தள்ளப்பட்டு,
கதாபாத்திரங்களும், தொழில் நுட்ப வல்லுனர்களும் முன்னிலைப்படுத்தப்பட்டது இதனால்
தானா?
கேள்வி 9: முழு
நெருக்கடியையும் அக்குழுவினர் மீது சுமத்துவதில் நியாயம் இருக்கிறதா?
கேள்வி 10: கலைஞர்களின்
மீது இத்தனை விதமான நெருக்கடிகளை விதிப்பது சரியா? அவர்களுக்கான சுதந்திரத்தை பறிப்பது போலல்லவா
இருக்கிறது? சமூகத்திலிருந்து விலகி நிற்பவன் தானே கலைஞன்! இந்தக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதன் மூலம்
கலைஞர்களின் படைப்புச் சுதந்திரம் பறிக்கப்படுகிறதா?
இந்தக் கேள்விகளையெல்லாம் என் கணிணியில் படிக்க நேர்ந்த நண்பர், 'சரி. நீங்கள் என்ன பதில் சொன்னீர்கள்?' என்று கேட்டார்.
'ஒரு நல்ல ஆசிரியனின் பண்பு, மாணவர்களின் எல்லா கேள்விகளுக்கும் தானே பதில் சொல்ல
முயலாமல் இருப்பது' என்றேன் நான்.
Comments