Skip to main content

சாதி - மொழி – சமயம் 3: அடையாளங்கள் குறித்து அயோத்திதாசர்



3 - மொழி :

மொழி பற்றி அயோத்திதாசர் பேசக்கூடியவற்றை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ள முடியும் - மொழிகளின் வரிவடிவ உருவாக்கம் குறித்தவை, தமிழ் மொழியின் கட்டமைப்பு குறித்தவை.  இவ்விரண்டின் அடிப்படையில் தமிழ் பௌத்த மொழித் தத்துவமொன்றை கட்டமைப்பது போன்றவொரு செயல்பாட்டை அவருடைய எழுத்துகளில் பார்க்க முடிகிறது.  அயோத்திதாசரின் மொழி பற்றிய சிந்தனைகளை தமிழ் பௌத்த மொழித் தத்துவம்என்று அழைப்பதில் காரணமிருக்கிறது.  பௌத்தத்தில் காணப்படும் மொழிக் கோட்பாடு என்று எழுதப்பட்டவைகளுக்கும் இவர் தரக்கூடிய விளக்கங்களுக்கும் பாரதூரமான வேறுபாடுகள் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

பௌத்த மொழிக் கோட்பாடு என்று பேசுபவர்கள் அனைவரும் பாலி மற்றும் சமஸ்கிருத மொழிகளை அடிப்படையாகக் கொண்டே விவாதிப்பதால், தமிழை மையமாகக் கொண்டு விவாதத்தில் ஈடுபடும் இவருடைய சிந்தனைகள் பௌத்தம்என்று அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து நிச்சயமாய் வேறுபட்டு நிற்கிறது.  எனவே, மொழியின் தோற்றம் குறித்தும், ஒழுங்கமைப்பு குறித்தும் இவர் முன்வைக்கக்கூடிய கருத்துகளை தமிழ் பௌத்த மொழிக் கோட்பாடுஎன்று சொல்வதே சரியாக இருக்கமுடியும்.

எல்லா சமயங்களையும் போலவே மொழியின் தோற்றத்தை இறைவனோடு தொடர்பு படுத்தியே தமிழின் பௌத்த இலக்கண நூலான வீரசோழியமும் பேசுகிறது.  ஆயுங்குணத்து அவலோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டே இம்புவனிக்கு இயம்பிய தண் தமிழ்என்பது தான் வீரசோழிய பாயிரத்தின் குறிப்பு. இதற்குப் பாரம்பரியமாக உரை எழுதக்கூடியவர்கள், அவலோகிதன் என்ற புத்தர் அகத்தியருக்கு தமிழ் மொழியைக் கற்றுத் தந்து நாடெங்கும் போய் பரவச் செய்தார் என்று எழுதுகின்றனர்.  இதனை, சற்றும் பொருட்படுத்தாத அயோத்திதாசர் வீரசோழியப் பாயிரம், வீரசோழியப் பதிப்புரை - சிவஞானயோகியார், முன் கலை திவாகரம், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மிக முக்கியமாக பதஞ்சலியார் ஞானம் போன்ற பனுவல்களிலிருந்து தருவித்த ஆதாரங்களைக் கொண்டு பௌத்தத்திற்கும் மொழியின் தோற்றத்திற்குமான புதிய கதையாடலொன்றை உருவாக்குகிறார்.

இப்புதிய கதையாடலின் படி, பௌத்தம் தோன்றுவதற்கு முன்பு வரை எல்லா மொழிகளையும் மக்கள் ஒலிவடிவாகவே பேசி வந்தார்கள்.  அக்கால் ஆதிபகவனாகும் புத்தபிரான் ஓதிவைத்த ஆதிவேதமொழி, ஆதிமறை மொழி என்னும் திரிபீட வாக்கியங்களாம் மூவரு மொழிகளை வரிவடிவின்றி ஒலிவடிவ சுருதியாக…’ போதித்து வந்தார்.  அதனைக் கேட்ட சிலர், கேட்ட மாத்திரத்தில் விளங்கிக் கொண்டு அதன் மீது சிந்திக்கலானார்கள்.  ஆனால், ‘…சிலர் கேட்டும் அவரவர்கள் மனதிற் படியாமல் சுருதி மயக்கங்கண்டனர்’.  இதனால், புத்தர் ‘…சகடபாஷையாம் சமஸ்கிருதத்தையும், திராவிட பாஷையாம் தமிழையும் வரிவடிவமாக இயற்றி தாம் நிலை நாட்டி வரும் சங்கத்தோர் யாவருக்கும் கற்பித்து சத்தியதன்மமானது மேலும் மேலும் பரவுவதற்காக அகஸ்தியருக்கு திராவிட பாஷையை கற்பித்துதென்புறத்திற்கு அனுப்பி …. தானும் அந்தந்த இடங்களுக்குச் சென்று வரிவடிவமாம் பாஷையை ஊன்றச் செய்து மெய்யறமாம் புத்த தன்மத்தையும் பரவச் செய்தார்’ ( . 601, இந்திரதேச சரித்திரம் - .சி. 1 ). 


 
மொழியின் தோற்றம் குறித்த தகவல்களுக்கு, வரி வடிவ உருவாக்கம் நடைபெற்றதாக சொல்லும் அயோத்திதாசர் அது மூன்று மொழிகளுக்கும் ஒரே சமயத்தில் நடைபெற்றது என்று சொல்திலிருந்து நாம் சில முடிவுகளை வருவிக்க முயற்சிக்கலாம்.  முதலாவதாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மொழியியல் - இந்தியவியல் என்ற பின்புலத்தோடு செய்யப்பட்டிருந்த 'திராவிட மொழிகள் - இந்திய ஐரோப்பிய மொழிகள் என்ற எதிர்வு நிலையை' கிஞ்சித்தும் நம்பியிருக்கவோ மதித்திருக்கவோ இல்லை என்பது விளங்குகிறது.  இரு வேறு மொழிக் குடும்பங்கள் என்ற வித்தியாசத்தை 'திராவிட இனம் - ஆரிய இனம்' என்ற இன எதிர்வாகக் கட்டமைக்கும் வாதத்தின் படி,  சமஸ்கிருதத்தை ஆரியர்கள் என்ற பிராமணர்களின் (வேஷ) மொழியாக விளக்குவதை அடியோடு மறுக்கும் அயோத்திதாசர்,  ஆரியர்களின் வருகைக்கு முன்பே இங்கு பாலி, தமிழ், சமஸ்கிருதம் என்னும் மூன்று மொழிகளும் வழங்கி வந்ததாய் தெரிவிக்கிறார்.  ஆரியர்கள் குறித்து வரைந்து வைத்துள்ள சித்திரங்களை ஒத்துக் கொள்ள மறுக்கும் அவர், 'நாணமற்ற ஒழுக்கத்தையும், கொடூரச் செயலையும், மிலேச்ச குணத்தையும்...' உடையவர்கள் பிராமணர்கள் என்று எழுதுகிறார்.  இதன் காரணமாகவே, பிராமணர்களை '..சேந்தன் திவாகர தேவர், தனது முன் கலை நூலிலும், மண்டல புருடன் தனது பின் கலை நூலிலும் மிலைச்சரென்றும், மிலேச்சரென்றும், ஆரியரென்றும் இவர்களை அழைத்திருக்கிறார்கள்' ( . 609, .சி. 1 ).  எனவே ஆரியர்களுக்கும் சமஸ்கிருதத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இருக்கவில்லை என்பதே இவரது முடிவு.

இரண்டாவதாக, பிற சமயவாதிகள் செய்தது போல், மொழியை உருவாக்கித் தந்ததே புத்தர் தான் என்று சொல்வதில் அயோத்திதாசருக்கு உடன்பாடு இருக்கவில்லை.  அப்படி இருக்கவும் முடியாது என்பது அவருடைய கருத்தாக இருக்க வேண்டும்.  ஆனாலும், அவலோகிதன் என்ற புத்தர் ஜனகர், வாமதேவர், நந்தி, ரோமர், கபிலர், பாணினி, அகத்தியமுனி போன்றோருக்கு மொழியை போதித்து உலகெங்கும் போய் பரவச்செய்தார் என்ற வரலாற்றுக் குறிப்பை ஒதுக்கித் தள்ளவும் வழியில்லை.  இந்த இக்கட்டிலிருந்து மீண்டு வருவதற்கு உருவாக்கப்பட்டதே 'சகட பாஷையாம் சமஸ்கிருதத்தையும், திராவிட பாஷையாம் தமிழினையும் ஆதியாக வரிவடிவில் போதித்தவரும் புத்தபிரானேயாகும்.  இவ்விரு பாஷைகளை இயற்றியது கொண்டே அருங்கலை நாயகனென்றும், அருங்கலை விநோதனென்றும் மற்றும் பெயர்களை அளித்துள்ளார்கள்' (. 544, .சி. 2) என்ற கதையாடலாகும்.  திரிபேத வாக்கியங்களை ஒலி வடிவில் கேட்டவர்கள் மனதில் இருத்த முடியாமல் மயக்கம் கொண்டார்கள்; அதனை முன்னிட்டே வரிவடிவம் உருவாக்கப்பட்டு திரிபேதங்கள் அனைத்தும் கற்களில் வெட்டி வைக்கப்பட்டன என்ற விளக்கத்தில் வெளிப்படக்கூடிய பகுத்தறிவு அயோத்திதாசரிடம் மேலோங்கி தெரியக்கூடிய குணமாகும்.

மொழி குறித்து பேசும் அயோத்திதாசர் தமிழ் மொழியின் ஒழுங்கமைப்பு என்ற பொருளில் ஏராளமான கருத்துகளை தெரிவிக்கிறார்.  இது நாள் வரையில் தமிழ் என்று பேசியவர்கள் சொல்லியிராத பல புதிய தகவல்களை இவரிடம் நாம் கேட்க முடிகிறது.  தகவல்கள் மட்டுமல்லாது புதிய கருத்தாக்கங்களையும் உருவாக்குகிறவராகத் தோற்றமளிக்கின்றார்.  அவரது கருத்துப்படி ஒவ்வொரு மொழிக்கும் இரண்டு முக்கியமான முகங்கள் உண்டு, அதனுடைய இலக்கண முகமும், இலட்சண முகமும்.  மொழியின் இலக்கண முகம் நமக்கெல்லாம் பரிச்சயமானது - மொழியை பயன்படுத்துவதற்கான சட்ட திட்டங்களும், வழிமுறைகளும்!  தமிழுக்கான பயன்பாட்டு விதிமுறைகள் தொல்காப்பியம், நன்னூல், வீரசோழியம் போன்ற இலக்கண நூற்களில் சொல்லப்பட்டுள்ளன.

மொழியின் இரண்டாவது முகம் என்று சொல்லக்கூடிய இலட்சணம் தான் நமக்குப் புதியது.  தமிழுக்கு ஐந்து விதமான இலட்சணங்கள் (பஞ்சலட்சணம்) இருப்பதாக அயோத்திதாசர் கருதுகிறார்.  எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று சொல்லக்கூடிய இந்த ஐந்து இலட்சணங்களும் பௌத்த தத்துவத்தோடு நெருக்கமான உறவுகளை உடையது.  தமிழ் மொழியின் எழுத்துகள் உருவாக்கப்பட்டதற்கு பின்னணியில் தர்க்கமொன்று செயல்படுவதாக அவர் கருதுகிறார்.  அதே போல் சொற்களின் உருவாக்கம், பொருளின் உருவாக்கம், யாப்புகளின் தன்மை, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள அணிகளின் இயல்பு என்று அனைத்து விதமான இலட்சணங்களுக்கு பின்பும் விரிவான தர்க்க ஒழுங்குகள் உள்ளன.  மொழிக்கான வரிவடிவத்தை உருவாக்கிய போது அதன் இலட்சணங்களையும் பௌத்தம் உருவாக்கியிருந்தது.  தமிழ் மொழி என்பது இலக்கணமும் இலட்சணமும் இணைந்தது என்பதே மரபான நம்பிக்கை.  இலக்கணத்தை மட்டும் கற்றுக் கொண்டு தமிழின் இலக்கியப் பனுவல்களை விளங்கிக் கொள்ளலாம் என்று நினைப்பது தவறாகவே முடியும்.  தமிழ் மொழியின் ஐந்து இலட்சணங்களும் விளங்காதவர்களுக்கு பனுவல்களின் உண்மைப் பொருள் தெரியவருவதில்லை.

இலட்சணம் என்பது மொழியின் அகக்கட்டமைப்பு போல் ஏதோவொன்று என்று விளங்குகிறதேயொழிய அதன் முழு வடிவமும் புலப்படவில்லை.  உண்மையிலேயே அது என்னது தான் என்பதை தெரிந்து கொண்டால் தான், அது தத்துவமா, தருக்கமா, பௌத்த விளக்கமா, உரை எழுதுவதற்கான முறையியலா என்று நம்மால் ஒரு முடிவிற்கு வரமுடியும்.  இந்த நிலையில் அயோத்திதாசர் சொல்ல விரும்பும் ஒரு செய்தி மட்டும் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது - தமிழ் மொழி விதிமுறைகளால் மட்டுமே செய்யப்பட்ட இயந்திர மொழி அல்ல; அது தனக்குள்ளேயும் ஓர் அர்த்த ஒழுங்கமைப்பைக் கொண்டுள்ளது!

தமிழ் மொழியின் இலட்சணங்கள் குறித்த விவரிப்புகள், அதன் பெயர்க்காரணத்திலிருந்து தொடங்குகின்றன.  தமிழ் மொழியை, 'தமிழ்' என்றும் 'திராவிடம்' என்றும் இரண்டு பெயர்களில் அழைப்பது வழக்கம்.  'தமிழ்' என்ற பெயர் தென்பகுதியிலும், அதாவது தமிழ் வழங்கக்கூடிய பகுதியிலும், 'திராவிடம்' என்ற பெயர் வடபகுதியிலும் வழக்கிலிருந்தது.  இதற்கும் காரணம் இருந்தது.  தமிழ் எழுத்துகளில் சிலவற்றை அமுத எழுத்துகள் என்றும் வேறு சிலவற்றை நஞ்சு எழுத்துகள் என்றும் வகுத்திருக்கிறார்கள்.  குறிப்பாக யாப்பு இலட்சணம் இந்த அமுத, நஞ்சு எழுத்துகளைப் பற்றிக் கூறி இவற்றுள் நஞ்சு எழுத்துகளை முதல் எழுத்தாகக் கொண்டு பனுவல்களை உருவாக்குவது தவறு என்று சொல்லியிருக்கிறது (. 463, .சி. 2).  அதன் படி, யா, யோ, ரா, ரோ, லா, லோ என்ற மூன்று ஒற்றெழுத்துகள், இரண்டளபடை, மகரக்குறுக்கம், ஆய்த எழுத்து - இவை அனைத்தும் நஞ்சு எழுத்துகள்; , , , , , ஸ், , , , , என்பவை அனைத்தும் அமுத எழுத்துகள்.  இந்த அமுத எழுத்துகளை முதலெழுத்தாகக் கொண்டு பனுவல்களைக் கட்டுவது தான் தமிழின் இலட்சணங்களுள் ஒன்று.  இவ்வாறு தமிழில் அமுதமும் நஞ்சும் கலந்து இருப்பதால், தமிழில் அமுத எழுத்துகள் உண்டு என்று சொல்ல விரும்புபவர்கள் அதனை அமுதம், அமிழ்தம், தமிழ் என்று அழைத்தனர்; தமிழின் நஞ்சு எழுத்துகளை சுட்டிக்காட்ட விரும்பியவர்கள், விஷ மொழி, விட மொழி, தீராத விடம் உடைய மொழி, தீராவிடம், திராவிடம் என்று அழைத்தனர்.  இப்படியே அதற்கு தமிழ் (அமிழ்தம்) என்றும் திராவிடம் (தீரா விடம்) என்றும் பெயர்கள் வந்தன (. 544, . சி. 2).

எழுத்து இலட்சணம்என்று சொல்லப்படும் தமிழ் எழுத்துகளின் ஒழுங்கமைவு பௌத்த தன்மத்தை அடியொற்றியது.  மனிதன், உடலும் உயிருமான இரு வேறு தன்மைகளை உடையவன்; ஆனால், தோற்றத்தாலும் செயலாலும் ஒரே வடிவமாய் வெளிப்படுபவன்.  உடல் - உயிர் என்ற இரு தன்மைகள் இருப்பது கொண்டு தனக்கு அப்பால் வேறொரு பொருள் இருக்கக்கூடுமென்று அவன் மலைக்கக் கூடாது.  தானே தன் செயலால் சீர் கெடுவான்..தானே தன் செயலால் சீர் பெறுவான்தானே தன் செயலால் துக்கமடைவான்..’ (. 566, .சி. 2).  உயிர் என்பது உள் மெய்’, அதாவது உண்மெய்’; இது அந்தர் அங்கத்தில்’ (அந்தரங்கம்) இருக்கிறது.  உடல் என்பது புற மெய்’, இது பகிர் அங்கத்தில்’ (பகிரங்கம்) உள்ளது. இதனையே தமிழ் எழுத்து இலக்கணமான, உயிர் மற்றும் மெய் எழுத்துகள் என்ற வகைப்பாடு சுட்டுகிறது.

இவ்வகையாய் எழுத்துகள் இரண்டாவது இலட்சணமான சொற்களாய் ‘…திரண்டு இலக்கிய இலட்சணம் அமைந்த போது ஒரு சொல் வாக்கியம், இரு சொல் வாக்கியம், முச்சொல் வாக்கியங்களாக…’ மாறுகிறது (. 567, .சி. 2) என்று அயோத்திதாசர் சொல் இலட்சணம்குறித்து பேசத் தொடங்குகிறார்.  மரபான மொழியியலும் சரி, நவீன மொழியியலும் சரி வார்த்தைகளை வாக்கியங்களாக ஒத்துக்கொள்வது இல்லை.  சொல் என்பதை உருபன்அல்லது குறிஎன்று அழைக்கிற மொழியியல் அதற்கு அர்த்தம் உண்டு என்று ஒத்துக்கொள்கிறதே தவிர, அவ்வர்த்தங்கள் தர்க்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று ஏற்றுக்கொள்வதில்லை.  சொற்களுக்கான அர்த்தங்கள், அதாவது குறிப்பான்கள், இடுகுறித்தன்மையை உடையவை என்பது தான் நவீன மொழியியலின் வாதம்.  ஆனால், அயோத்திதாசர், எழுத்துகளிலிருந்து சொற்கள் உருவாகும் முறையை இலக்கியம்என்று அழைக்கிறார்; சொற்களை, வாக்கியங்கள் என்று அழைக்கிறார்.  அதாவது, சொற்கள் தன்னளவில் தொடர் நிலை உறவையோ அல்லது சேர்க்கை நிலை உறவையோ கொண்டிருக்கின்றன என்று விளக்குகிறார்.  அவரைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு சொல்லும் ஒரு வாக்கியம்; அதனுள் கிடைக்கோட்டு அல்லது குத்துக்கோட்டு உறவு ஓடிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

ஒவ்வொரு தமிழ் சொல்லும் ஒரு வாக்கியம், எனவே அது இலக்கியம் என்று அயோத்திதாசர் வாதிடுவதை விளக்குவதற்கு அதிகமாய் மெனக்கெடத் தேவையில்லை.  அவர் புதிதாக விளக்கமளித்த சொற்களையே நாம் உதாரணங்களாய் எடுத்துக் கொள்ள முடியும்.  சாதிஎன்ற சொல்லுக்கு, ‘சாதிக்கிற மொழியே சாதிஎன்று அவர் தரக்கூடிய விளக்கம் ஒரு சொல் வாக்கியத்திற்கான மிகச் சரியான உதாரணமாக இருக்க முடியும்.  சாதி என்ற சொல்லினுள் ஒரு காரியத்தை செய்து முடிக்கும் வழிவகைஎன்றொரு வாக்கியம் ஒழிந்திருக்கிறது என்பது தான் அவரது வாதம்.  அதே போல், ‘அந்தரங்கம்என்ற சொல், இரு சொல் வாக்கியமாகும்.  அந்தர்’, ‘அங்கம்என்றொரு தர்க்கம் அதனுள் செயல்படுகிறது என்பது அவரது விளக்கம்.  பொம்மைஎன்பது, இரு சொல் வாக்கியம்; அதனுள் பொய் மெய்என்ற வாக்கியம் தொழிற்படுகிறது.  இவ்வகையாக சொற்களுக்கான அர்த்தங்களை கண்டறிவது தான் தமிழின் சொல் இலட்சணம்என்று சொல்லும் அயோத்திதாசர், ‘…இரு சொல் வாக்கியத்தை ஒரு சொல்லே என்றும், பகுபதத்தை பகாபதமேயென்றும் பண்பு பிறழ்ந்து ஒருமை, பன்மை, தன்மை என்று வரைவதானால், பஞ்சலட்சண வாக்கியத்தின் கருத்தும் கெட்டு அதன் உரிய பொருளும் கெட்டு மலைவுற்று போகும்’ (. 567, .சி. 2) என்று எழுதுகிறார்.

ஜி. யு. போப்பின் திருக்குறள் விளக்கவுரையைப் பார்த்து மனம் வெதும்பிப் போகிற அயோத்திதாசர் பௌத்தர்களின் இலக்கணோற்பவம் போப்பையருக்கு தெரியாதென்பது பௌத்தர்களது இலட்சணோற்பவம் போப்பையருக்கு தெரியாதென்பதேயாம்என்ற தலைப்பில் 1914, ஏப்ரல் 22 தேதியிட்ட தமிழன் இதழ் 7:46ல் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.  அக்கட்டுரையில் தமிழ் மொழியின் இலட்சணங்களை விளக்கி எழுதிவிட்டு, ‘…பஞ்சலட்சணமே விளங்காதோர்க்கு தருக்க லட்சண பாகுபாடுகளே விளங்காவாம்.  விளங்குவோர் பால் வாதிடுவதே விவேக விருத்தி, விளங்கார் பால் வாதிடுவதால் விவேகம் குறைவாம்’ (. 567, .சி. 2) என்று முடிக்கிறார்.  இத்தகைய ஐந்து இலட்சணங்களையும் அறிந்து கொள்வதற்கு என்ன வழி என்று கேட்டால் அதற்கும் பதில் அந்தக் கட்டுரையிலேயே சொல்லப்பட்டிருக்கிறது: ‘…பௌத்தர்களால் இரு நூறு வருடங்களுக்கு முன் வரைந்து வைத்துள்ள ஓலைப் புத்தகங்களிலும் சிலா சாசனங்களிலும் காணில் (இவை) பரக்க விளங்கும். பண்டை காலத்தார் கருத்தையும், பண்டை நூற்களையும், பண்டை சிலாசாசனங்களையும் ஆய்ந்துணராதவர்களுக்கு பஞ்ச லட்சணம் விளங்காவாம்’.

தமிழ் மொழியின் ஒழுங்கமைப்பாக செயல்படுவது பௌத்த தத்துவமே என்று கருதுகிற அயோத்திதாசர், மொழியை விளங்கிக் கொள்வதன் மூலம் பௌத்தம் சொல்லக்கூடிய நிர்வாண நிலையை அடைய முடியும் என்று சொல்வது அதன் உச்சபட்ச சிந்தனையாக அமைகிறது.  மொழியின் அந்தாரார்த்தம் இவ்வுலகைப் புரிந்து கொள்வதற்கான வழிவகையாகவே செய்யப்பட்டுள்ளது என்பது தான் அவருடைய யோசனை.  நஞ்செழுத்து - அமுதெழுத்து என்ற பாகுபாடு, மனிதனுக்குள்ளே தோன்றக்கூடிய 'ஆசை - சாந்தம்' என்ற இரு குணங்களின் உருவகமாக நின்று கொண்டிருக்கிறது.  எவ்வாறு பனுவலை உருவாக்கும் போது நஞ்செழுத்தை தவிர்க்கிறோமோ அதே போல் வாழ்க்கையிலும் ஆசை என்ற நஞ்சை தவிர்த்து 'அமுதமாகும் சாந்தத்தை பெருக்கி...உண்மெய்யில் நிலைத்து...' நிற்பதே தமிழின் அடிப்படையான யோசனை.

மொழிக்கும் சிந்தனைக்குமான தொடர்புகளை பலரும் சொல்லியிருக்கிறார்கள்.  மொழி, கருத்துப் புலப்படுத்த சாதனம் மட்டும் அல்ல; அது சிந்திக்கும் கருவியாகவும் செயல்படுகிறது என்பதை 12ம் நூற்றாண்டை சார்ந்த ஃப்ரெஞ்ச்சு நாட்டு பொருள்கோளீயரான பியர் அபிலார்ட் ஐரோப்பிய தத்துவ மரபில் முதன் முறையாக அறிவிக்கிறார்.  இதன் தொடர்ச்சியாக அவர் சொல்லக்கூடிய இன்னொரு விஷயமும் நமக்கு உதவிகரமாக இருக்கக் கூடியது.  சொல்லாடல்களின் வகைகளையும், தோற்றத்தையும் பற்றி பேசக்கூடிய அவர் இறுதியாக, 'எல்லா சொல்லாடல்களும் அரசியல் சொல்லாடல்களே!' என்றொரு விஷயத்தை பதிவு செய்கிறார்.  அதாவது, மொழி என்பதோ அதன் துணையோடு உருவக்கக்கூடிய சொல்லாடல்கள் என்பதோ எந்தவிதமான சார்புமின்றி நடு நிலைமையோடு செயல்படுகின்றன என்று சொல்வதற்கில்லை; அவை அனைத்திற்கும் பின்புலத்தில் தீர்மானமான அரசியல் நிலைப்பாடுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதே அபிலார்டின் கண்டுபிடிப்பு.  கிறிஸ்தவ மத நூலான வேதாகமத்தை பனுவலாய்வு செய்த போது மேற்கண்ட முடிவுகளை எட்டுகிற அவருடைய சிந்தனை, பின்னால் 17ம் நூற்றாண்டு கார்ட்டீசிய சிந்தனையாளர்களான தெகார்தே மீதும் டெஸ்டாட் டூ ட்ரேஸி மீதும் ஏராளமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்று ஆய்வளர்கள் தெரிவிக்கின்றனர்.  குறிப்பாக, கருத்ததுருவம் என்று நாம் அழைக்கும் ideology என்ற கருத்தாக்கத்தை ட்ரேஸி உருவாக்குவதற்கு அபிலார்டின் மொழி பற்றிய சிந்தனைகளே அடிப்படைகளாக இருந்தன.

கருத்துருவம் என்பது மொழியின் மூலமே உருப்பெறுகிறது என்று ஐரோப்பிய மொழியியல் நம்புகிறது.  பதினேழாம் நூற்றாண்டு வரை தொடர்ந்து வந்திருந்த மொழி குறித்த இந்த சிந்தனை, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட வரலாற்றுப் பார்வையின் மூலம் சற்றே மறந்து போகப் பட்டிருந்தது.  மொழியை வரலாற்றின் சுவடுகள் நிரம்பிய பொருளாகப் பார்க்கிற பார்வை, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலும் கூட வேர்ச்சொல்லாய்வுகள் என்ற பெயரில் கோலோச்சி வந்தது.  இந்தப் பார்வை மொழியின் ஒவ்வொரு சொல்லையும் ஒரு வரலாற்று ஆவணமாக உருவகித்தது.  ஆதியிலிருந்து பயின்று வந்து கொண்டிருக்கும் மொழி, மனித சமூகம் கடந்து வந்த ஏராளமான வீழ்ச்சிகளையும் எழுச்சிகளையும் அருகிலேயே இருந்து பார்த்து வந்த சாட்சியாக இருக்கிறது.  சாட்சியாக மட்டுமல்லாது, ஒவ்வொரு சூழலுக்கும் தகுந்தவாறு தன்னை தகவமைத்துக் கொண்டும் வந்துள்ளது.  எனவே, மொழியின் தேகமெங்கும் கடந்த காலத்தின் பதிவுகள் தடயங்களாக மிஞ்சி நிற்பதற்கான வாய்ப்புகள் ஏராளம்.  ஒவ்வொரு சொல்லும் வரலாற்றின் பல்வேறு படிவங்களால் சூழப்பட்டுள்ளது.  இந்தப் படிவங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக விலக்குவதன் மூலம் மொழியின் ஆதி வடிவை, வேர்களை நாம் அடைய முடியும் என்ற யோசனை, மொழியை திரைச்சீலை போலவோ அல்லது பிரதிபலிக்கும் கண்ணாடி போலவோ குறுக்கிப் பார்க்கும் தவறை செய்தது என்பது தான் குறியியலின் மூலமாக பெர்டினான் டீ சசூர் முன் வைத்த குற்றச்சாட்டு.  இதன் தொடர்ச்சியாகவே, சொல்லின் பகுதிகளான குறிப்பானுக்கும் குறிப்பீட்டிற்கும் இடையே தர்க்க ரீதியான உறவு ஏதும் இல்லையென்றும், தொடர் நிலை - சேர்க்கை நிலை போன்ற தர்க்கங்களெல்லாம் சொற்கள் இணைந்து உருவாக்கும் வாக்கிய அமைப்பிலேயே உருவாகிறது என்றார்.

ஆனால், மொழி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சேகரமாயிருக்கும் மாதிரியில் ஒரு ஒழுங்கமைப்பு இருப்பதாகவும் (langue), அதில் மேற்கூறிய தொடர் நிலை, சேர்க்கை நிலை உறவுகள் செயல்படுகின்றன என்றும் அவர் தெரிவிக்கிறார்.  இந்த தர்க்கமே சொற்களின் மீது கருத்தியல் தடயங்களை (traces) ஏற்படுத்துகிறது என்ற சசூரின் யோசனையையே அதன் பின்பு ழாக் தெரிதா கட்டுடைத்தல் (deconstruction) என்ற பனுவல் விளையாட்டிற்கு அடிப்படையாகக் கொண்டிருந்தார்.  சொற்கள் எங்கெல்லாம் குழுமியிருக்கின்றனவோ அங்கெல்லாம் தர்க்கம் செயல்படுகிறது; இந்த தர்க்கமே மொழியைப் பயன்படுத்தி சிந்திப்பதற்கு நமக்கு உறுதுணையாக இருக்கிறது.  மொழி, சிந்திக்கும் கருவி என்று அழைக்கப்படுவதன் காரணமும் இது தான்.  ஒரு வகையில் மொழி சிந்திப்பதற்கு பயனுள்ள கருவியாக இருக்கிறது என்றாலும், இன்னொரு புறம் அது மாற்று சிந்தனைக்கான கதவுகளை மூடியே வைத்திருக்கிறது என்பதும் உண்மை.  மாற்று சிந்தனைக்கு முயற்சிக்கையில் மொழி தரக்கூடிய அனுகூலங்களை நாம் அடியோடு மறுத்து விட வேண்டிய கட்டாயம் இதனால் தான் ஏற்படுகிறது.

மொழியின் கட்டுக்கோப்பினுள் செயல்படுவதாக சொல்லப்படும் ஒழுங்கமைப்பு போன்ற ஒன்றாகவே, அயோத்திதாசர் சொல்லக்கூடிய 'இலட்சணம்' என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.  தமிழ் மொழியின் ஒழுங்கமைப்பு என்பது பௌத்த தன்மமே என்று அவர் நிறுவ முயற்சிக்கிறார்.  பௌத்த தத்துவம் இந்த உலகை எவ்வாறு மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறதோ, அது போலவே தமிழ் மொழி கட்டப்பட்டிருக்கிறது.  நஞ்சோடும் அமுதோடும்.  'நான்' அமுது அமுது என்று சொல்ல, 'பிறர்' நஞ்சு நஞ்சு என்று சொல்லும் யதார்த்தத்தோடு.  நஞ்சை விலக்கி அமுதத்தை முன்வைத்து பனுவல்களைக் கட்டமைக்கும் முறையியலோடு.  அப்பனுவல்களின் மெய்ப்பொருளை உணர்ந்து பேருவகை அடையும் வாய்ப்புகளோடு! 

இவ்வாறு பௌத்த தன்மத்தின் தூல வடிவமாகவே விளங்கும் 'தமிழ்' மொழி தான் நமது சாதி அடையாளம் என்பதே அயோத்திதாசரின் முடிவாக இருக்கிறது.  சாதியை மொழி அடையாளமாகவும், மொழியை சமயக் கருத்துருவ அடையாளமாகவும் விளக்குகிற அயோத்திதாசர் சமயத்தை எவ்வாறு விளக்குவார் என்று அறிந்து கொள்வதற்கு நிச்சயமாய் ஆவல் ஏற்படும்.  ஆச்சரியப்படும் வகையில் சமய அடையாளத்தை மறுக்கிறவராக அவர் வெளிப்படுகிறார்.

சமயம் என்ற சொல்லின் பொருள் 'காலம்' என்று சொல்லி தனது விளக்கத்தை ஆரம்பிக்கிறார்.  'நீ என்ன சமயத்திலிருக்கிறாய்?' என்ற கேள்வி அறப்பள்ளிகளில் தங்கியுள்ள சமண முனிவர்களைப் பார்த்து கேட்கப்படும் கேள்வி.  பொது நிலையிலுள்ளவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியை பூர்வத்தில் யாரும் கேட்பதில்லை.  பள்ளிகளில் தங்கியுள்ள முனிவர்களின் கடமைகள் மூன்றாக சொல்லப்படுகின்றன - விவேக விருத்தி, வித்துவ விருத்தி, ஞான விருத்தி.  இதில் விவேக விருத்தி என்பது அறிவைப் பெருக்குவதாகும்.  இதற்காக '...தமிழ் அட்சர இலட்சணங்களை விளக்கும் இலக்கண நூற்களையும், பல் பொருட்களை விளக்கும் இலக்கிய நூற்களையும், கலை நூற்களையும், கணித ஆராய்ச்சிக்குரிய சோதிட நூற்களையும், ஓடதி விருத்திக்குரிய வைத்திய நூற்களையும் வகுத்தல்..' (. 548, .சி. 2) முனிவர்களின் பணியாகும்.  இரண்டாவது கடமையான வித்துவ விருத்தியின் போது '...சிறுவர்களுக்கு தமிழ் பாஷையைக் கற்பித்து...' அவர்களை நல்வழிப்படுத்துவார்கள்.  மூன்றாவது கடமையான ஞான விருத்தியின் போது 'தன்னை ஆய்வதே' முக்கியமாக நடைபெறும்.  இந்த மூன்று கடமைகளையும் முனிவர்கள் நிகழ்த்த வேண்டியது கட்டாயம்.  விவேக விருத்தியின் போது செய்யப்படும் நூற்களை இயற்றும் காலத்தை அருக சமயம் என்றும், சிறுவர்களுக்குக் கற்பிக்கும் காலத்தை பௌத்த சமயம் என்றும், தன்னையே அறியும் காலத்தை சீவ சமயமென்றும் சொல்வது மரபு.  முனிவர்களைத் தவிர்த்த பிறருக்கு சமய அடையாளங்கள் இருக்கவில்லை என்பதே அயோத்திதாசரின் விளக்கம்.

சமயத்திற்கு இணையான வார்த்தை என்று சொல்லப்படும் 'மதம்' என்ற சொல்லை, அவச்சொல் போலவே அவர் பயன்படுத்துகிறார்.  'மதக்கடை' என்ற இரு சொல் வாக்கியமே மதம் குறித்த அவரது நிலைப்பாடாகும்.  '...கல்லுகளாலும், பித்தளைகளாலும், களிமண்ணாலும், எலும்புகளினாலும் செய்துள்ள பலவகை சிலைகளைப் பரப்பி இந்த சாமி பெரியசாமி, அந்த சாமி சின்னசாமி, அந்த சாமி மோட்சத்திற்கு நேரே வழி காட்டும் சாமி, இந்த சாமி எதிரிகளையெல்லாம் கொல்லும் சாமி, அந்த சாமி உங்கள் நோய்களையெல்லாம் போக்கி விடும் சாமி, இந்த சாமி உங்கள் பாவங்களையெல்லாம் நீக்கி விடும் சாமி எனக்காட்டி தட்சணை தாம்பூலம் கொண்டு வாருங்கோளென்றும், உண்டிப்பெட்டிக்கு காசுகள் போட்டுக் கொண்டே வாருங்கோளென்றும்...பேசும்...இத்தகைய மதக்கடைகளும், மதக்கடை வியாபாரிகளும் உலகிலுள்ள எத்தேசத்திலும் விசேஷமாகக் கிடையாது.  இந்து தேசத்தில் மட்டும் விசேஷமாகக் காணலாம்' (.152-152, .சி. 2).  எனவே மதம் என்ற சொல்லையும் அதன் மூலம் உருவாக்கப்படுகிற அடையாளத்தையும் ஒட்டு மொத்தமாய் மறுக்கிறவராக அயோத்திதாசர் காணப்படுகிறார்.  பௌத்தத்தை மதம் என்று அழைத்து, புத்தரை பெரிய சாமி அல்லது சின்ன சாமி என்று வியாபாரம் செய்பவர்களையும் அவர் மறுக்கிறார் என்பது இங்கு முக்கியம்.

சாதி - மொழி - சமயம் என்ற மூன்றில் எது ஒரு மனிதனின் அடையாளமாக இருக்க முடியும் என்ற கேள்விக்கு அயோத்திதாசரின் தெளிவான பதில் 'மொழி' தான் என்பதில் சந்தேகம் எதுவும் இருக்கவில்லை.  தனது பத்திரிகைக்கு 'தமிழன்' என்று பெயர் சூட்டியதிலிருந்தே இதை நாம் யூகிக்க முடியும்.  ஆனால், அதே சமயம், தமிழ் என்ற அடையாளத்தை அவர் எவ்வாறு விளங்கிக் கொள்கிறார் என்பது தான் முக்கியமாகிறது.  தமிழ் என்பது எல்லோரையும் இணைக்கும் கருவி என்று தட்டையாகவோ; பாரம்பரிய சின்னம் என்று உணர்ச்சிவசப்பட்ட நிலையிலோ; பிராமணர்களுக்கு (சமஸ்கிருதத்திற்கு) எதிரானது என்று எதிர்மறையாகவோ; தமிழ்த் தாய், பெண் என்று கற்பனையாகவோ; உயிர், மூச்சு, தெய்வம் என்று பக்தி வசப்பட்டோ புரிந்து கொள்ளப் படாமல் தத்துவார்த்த, கருத்துருவ நிலைப்பாட்டை அறிவிக்கும் அடையாளமாக முன்வைக்கப்படுகிறது என்பது தான் இங்கு முக்கியமாகிறது.

அயோத்திதாசர், பௌத்த தன்மம் என்று சொல்லக்கூடிய அனைத்தும் உலகாய்தத்தின் அடிப்படையாக இருப்பதை நாம் எளிதாக விளங்கிக் கொள்ள முடியும்.  எந்தவொரு அர்த்தமும் இந்த உலக நிகழ்வுகளிலிருந்தே பெறப்படுகிறது என்பதும், ஒருவன் செய்யக்கூடிய செயலே அவனது தன்மையைத் தீர்மானிக்கிறது என்பதும், உலகைக் கடந்து வேறொரு சக்தி எதுவும் நம்மை இயக்கவில்லை, அறிவை விருத்தி செய்வதன் மூலமே ஒருவன் முக்தி அடைய முடியும் என்ற தீர்க்கமும், பிறப்பினடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை மறுக்கிற தன்மையும், இவையனைத்தும் செழித்தது தான் பண்பாடு என்ற யோசனையும் அவரால் பௌத்தம் என்று சொல்லப்பட்டாலும், நவீன கருத்துருவ நிலையாகவே தோன்றுகிறது.  தமிழ் என்ற அடையாளத்தை இவ்வாறு தனிமனித - சமூக விடுதலைக்கான கருத்தியல் தளமாக வரையறுப்பதோடு அதுவே 'சாதிக்கும்' அடையாளமாகவும் இருக்க முடியும் என்று அவர் பேசுவது, மிகத் தெளிவான அரசியல் நிலைப்பாடாகவே காணப்படுகிறது.

அடையாளம் குறித்த கேள்வியில், சாதி, மொழி, சமயம் என்ற காரணிகளுக்கு இடையேயான உரையாடலில் அவர் இறுதியாக என்ன நிலைப்பாட்டிற்கு வந்து சேர்கிறார் என்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம், அந்த முடிவை எவ்வாறு எட்டுகிறார் என்ற வழித்தடத்திற்கும் இருக்கிறது. அவற்றை கோடிட்டு காட்டுவது முக்கியம் என்று நினைக்கிறேன்.

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக